Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சிக்கிய போலி வழக்கறிஞர்

ஏப்ரல் 26, 2019 06:45

திருச்சி: திருச்சி புத்தூர் ஆபிஸர்ஸ் காலனியில் அட்சயா அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் புகைப்படக் கலைஞர் சிராஜூதீன் வயது 53. சிராஜுதீன் ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக கோட்டை ரயில் நிலையத்திற்கு சென்றார்.

அப்போது திருச்சி ஜீவா நகரை சேர்ந்த முகமது தாவர்அலி என்பவர்க்கும் தகராறு ஏற்பட்டது முகமது தாவர்அலி வழக்கறிஞர் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மிரட்டல் விடுத்த முகமது தாவர்அலி மீது சிராஜுதீன் கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்தார். 

காவல்நிலைய ஆய்வாளர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில் முகமது தாவர்அலியின் இருசக்கர வாகனத்தில் 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்தன. மேலும் கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 
 
வாகன முகப்பில் சட்டமே வெல்லும் டாக்டர் திருச்சி முகமது தாவர்அலி பிஎஸ்சி சட்ட உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற ஸ்டிக்கரும் வழக்கறிஞர்கள் பயன்படுத்தக்கூடிய ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தது. இதில் இவர் உரிமைகள் சங்கத்தில் மாநில செயலாளர் என்று எழுதப்பட்டு உள்ளது. 

மேலும் அவரது முகநூல் பதிவில் தமிழ்நாடு ரிப்போர்ட்டர் என இருப்பதை கண்டறிந்த போலீசாருக்கு போலி நிருபரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. முகமது தாவர்அலி மீது இபிகோ 294(பி), 506(2), 417, 465, 468 மற்றும் 45 வக்கீல் சட்டம் 1961 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் புலன் விசாரணை செய்து வருகிறார்கள்.
 

போலியான நபர்கள் வழக்கறிஞர்கள் பேரில் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் மத்தியஸ்தம் செய்வதும் திருச்சியில் தொடர்கிறது. போலி நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் கூறிவருகிறார்கள்.
 

தலைப்புச்செய்திகள்